Saturday, December 3, 2016

பாரதி பாடல் - சின்னஞ் சிறு கிளியே

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா! 
செல்வக் களஞ்சியமே! 
என்னைக் கலி தீர்த்தே - உலகில் 
ஏற்றம் புரிய வந்தாய்! 
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா 
பேசும்பொற் சித்திரமே! 
அள்ளி யணைத்திடவே - என் முன்னே 
ஆடி வருந்தேரே ! 

ஓடி வருகையில் - கண்ணம்மா 
உள்ளங் குளிரு தடீ! 
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் 
ஆவி தழுவு தடீ! 
உச்சி தனை முகந்தால் - கருவம் 
ஓங்கி வளரு தடீ! 
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் 
மேனி சிலிர்க்கு தடீ! 

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் 
கள்வெறி கொள்ளு தடீ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா 
உன்மத்த மாகு தடீ! 
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது 
சஞ்சல மாகு தடீ! 
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு 
நெஞ்சம் பதைக்கு தடீ! 

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் 
உதிரங் கொட்டு தடீ! 
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா! 
என்னுயிர் நின்ன தன்றோ? 
சொல்லு மழலையிலே - கண்ணம்மா! 
துன்பங்கள் தீர்த்திடு வாய்; 
முல்லைச் சிரிப்பாலே - எனது 
மூர்க்கந் தவிர்த்திடு வாய். 

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல் 
ஏடுகள் சொல்வ துண்டோ? 
அன்பு தருவதிலே - உனைநேர் 
ஆகுமோர் தெய்வ முண்டோ? 
மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல் 
வைர மணிக ளுண்டோ? 
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல் 
செல்வம் பிறிது முண்டோ?


// என்னைக் கலி தீர்த்தே - எனது துன்பங்களையெல்லாம் ஒழித்து


Note:

Updated.
இருந்தபோதிலும், இதில் எழுத்து பிழை இருக்க வாய்ப்பு உள்ளது.
பாரதியார் புத்தகத்தில் பிழையற்ற பாடல் இருக்கும்.

இதை  பார்வைக்கு  மட்டுமே பயன்படுத்தவும்.
நன்றி!


2 comments:

  1. ... நிறைய பிழைகள் உள்ளன.. வரும் தலைமுறை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது... நன்றி...

    ReplyDelete